Aug 24, 2007

முல்லா - குதிரையான கதை

ஒருமுறை ஒரு சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் தனது அழகான குதிரையை கட்டிவைத்து விட்டு தேவாலயத்திற்குள் சென்றாராம். அப்போது அந்தப் பக்கமாக வந்த முல்லா அந்தக் குதிரையின் அருகில் சென்று "அடடா என்ன அழகான குதிரை!" என்று அதன் அழகை வியந்து அதன் கழுத்தைத் தடவிக்கொடுத்தாராம். அப்போது அங்கு வந்த இன்னொருவன் "முல்லா இது உங்கள் குதிரையா?" என்றானாம்.
இவ்வளவு அழகான குதிரையை தன்னது இல்லையென்று எப்படிச் சொல்வது என்று யோசித்த முல்லா, "ஆமாம், என் குதிரைதான்" என்று முதல் பொய்யைச் சொன்னாராம். "அப்படியானால் இதை எனக்கு விற்றுவிடுகிறீர்களா?" என்றானாம்.
வந்தவன். முல்லாவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. யோசித்தார். அவன் வாங்க முடியாத அளவுக்கு ஒரு விலையைச் சொன்னால் போச்சு என்று அவருக்குத் தோன்றியது. உடனே "பத்தாயிரம் ரூபாய்" என்று சொல்லிவிட்டார்.
தன் குதிரைதான் என்ற பொய்யை காப்பாற்றி ஆகவேண்டுமே? ஆனால் வந்தவனோ, "பத்தாயிரம்தானே, சரி, இந்த அற்புதமான குதிரைக்கு அந்த விலை சரிதான்" என்று சொல்லி, உடனே பத்தாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தானாம். முல்லா யோசிக்க ஆரம்பித்தார். பத்தாயிரம் ரூபாய். சும்மா வருகிறது. உள்ளேபோன குதிரையின் சொந்தக்காரனோ தூங்குகிறான் போலுள்ளது. விற்றுவிடலாம் என்று முடிவு செய்து குதிரையை அவிழ்த்து கொடுத்தனுப்பினார். அவன் குதிரையோடு போய்விட்டான்.
பணத்தை எண்ணி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே போன குதிரையின் சொந்தக்காரன் வெளியே வந்தானாம். யோசிக்கக்கூட நேரமில்லாத சூழ்நிலையில் உடனே முல்லா தனது வாய்க்குள் கொஞ்சம் புல்லைப் போட்டுக்கொண்டு, தன் கழுத்தைச் சுற்றி கயிற்றைகட்டிக் கொண்டாராம்.
சொந்தக்காரனோ, பயந்தும் குழம்பியும், முல்லாவிடம் வந்து, "என் குதிரை எங்கே? நீங்கள் யார்?" என்றானாம். அதற்கு முல்லா," நான்தான் உன்குதிரை. நான் விபச்சாரம் செய்ததால் இறைவன் என்மீது கோபித்து என்னைக் குதிரையாக்கிவிட்டான். இப்போது எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது. மறுபடியும் மனிதனாகிவிட்டேன்" என்றாராம். அதைக்கேட்ட அந்த சொற்பொழிவாளனுக்கு ரொம்ப பயமாகிவிட்டது. தெய்வக்கோபம் ஒரு மனிதனை மிருகமாக்கிவிடுமா? உடனே மண்டி போட்டு இறைவனிடம் தன் பாபங்களுக்காக தன்னை மன்னிக்கும்படி உருக்கமாக வேண்டினானாம். பிறகு முல்லாவைப் பார்த்து, " சகோதரனே, நடந்தது நடந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குப் போய்விடுங்கள். நான் சந்தையில் போய் வேறு குதிரை வாங்கிக்கொள்கிறேன்." என்று சொல்லி சந்தைக்குச் சென்றானாம்.
அங்கே போனால் சந்தையில் அவனுடைய குதிரையே நின்று கொண்டிருந்தது விற்கப்படுவதற்காக! அதைப்பார்த்ததும் அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. குதிரையின் அருகில் சென்று மெதுவாக அதன் காதில், "என்ன முல்லா, மறுபடியுமா? இவ்வளவு சீக்கிரமாகவா?" என்றானாம்!

0 Comments: